மரணம்
மரணம் மரணம். என்ற சொல்லை கேட்டவுடன் மனிதர்களுக்கு ஒரு பயம் வந்துவிடுகிறது. மனதில் ஒரு கலக்கம் தோன்றிவிடுகிறது அது ஏன்? அதுவும் பல காரணங்களினால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களும் மரணத்தை கண்டு அந்த பயத்தின் காரணமாகவே விரைவில் உயிரை விடுகிறவர்களும் உண்டு.தான் பாசம் வைத்தவர்கள் மட்டும் மரணமடைந்தால் துக்கப்படும் மனிதர்கள் உலகில் தினந்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களை பற்றி கண்டுகொள்வதேயில்லை என்பதுதான் விசித்திரம். அது அவர்களின் மனதை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. மரணம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே. அப்படியிருக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாக பாவிக்கவேண்டியதுதானே. பிறகு ஏன் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் யார்மீது பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் வருத்தபடுகிறார்கள்.இதிலிருந்து தெளிவாக தெரிய வருகிறது,எதன் மீதும் பற்று வைத்தால்தான் ,அது நம்மை பாதிக்கும் என்று.எல்லோருக்கும் தெரியும் இந்த உலகில் பிறந்தவர்கள் ஒருநாள் இந்த உலகை விட்டு போக வேண்டும் என்று இருந்தும் மனிதர்கள் அந்த உண்மையை மறந்துவிடுவதால்,விதி தன் கடமையை செய்யும்போது அதை எதிர்கொள்ள சக்தியற்று வாயடைத்து போகிறார்கள்.பிறப்புக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் மனிதர்கள் தங்களின் இறப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொண்டு அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதில்லை. இறப்பை பற்றி பேசவே அஞ்சுகிறார்கள். இறப்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் இறைவன் அளித்த பரிசு. அதை கண்டு பயப்படுவதோ அல்லது அதை நினைத்து வருத்தபடுவதோ கூடாது. நாம் வாலிப பருவத்தில் இருக்கும்போது குழந்தை பருவத்தில் இருந்த உடம்பு இறந்துவிட்டது. நாம் அதை பற்றி கவலைப்பட்டது கிடையாது. நம் முதுமை பருவத்தில் வாலிப பருவத்தில் இருந்த உடல் இல்லை.அதை போல்தான் நாம் இறக்கும்போது நாம் குடியிருந்த உடலும் நமக்கு பயன்படாமல் போகிறது.பயன்படாத உடலை இவ்வுலகில். இருப்பவர்கள் அழித்துவிடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வருகிறது..நாம் இந்த உடலை விடும்போது இறைவன் நமக்கு மற்றொரு புதிய உடலை நிச்சயம் அளிக்க போகிறான். நாம் உடலை விட்டு நீங்கினாலும் நம்முடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள் நம்முடையே வருவதால் அவைகளை நிறைவேற்றி கொள்ள புதிய உடலை இறைவன் தரபோவதால் நாம் மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் எல்லா ஆசைகளையும் எண்ணங்களையும் இங்கேயே விட்டுவிட்டு இறைவனையே நினத்துக்கொண்டு இருந்தால் எண்ணங்கள் இல்லாத நிலையில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாதலால்,நாம் மீண்டும் பிறவா நிலையை பெற்று இறைவனுடன் கலந்து விடலாம். அது உங்கள் கையில்தான் உள்ளது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home